கொழும்பு: இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சே தாம் பதவி விலக தயாராக உள்ளதாக புத்த பிக்குகள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட குழுக்களிடம் கூறியதாக முன்னாள் அமைச்சர் உதயா கம்மன்பிள்ள கூறினார்.
பிரதமர்களின் அதிகாரங்களை தேவையற்ற முறையில் பயன்படுத்துபவர்கள், அவரைப் பதவி விலக விடாமல் தடுப்பதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கம்மன்பிள்ள தெரிவித்தார்.
பிரதமரிடம் அவர்கள் தொடர்ந்து இவ்வாறு நடந்துகொண்டால், தாம் அவர்களின் பெயர்களை வெளியிட வேண்டியிருக்கும் என்றும் அவர் சொன்னார்.
அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளிடம் 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாகவும் அவர் சொன்னார்.
இதற்கிடையே, மகிந்த ராஜபக்சே பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மாணவர்களைப் பிரதமர் வீட்டிற்குள் நுழைய விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது பிரதமர் மகிந்த, அங்கு இல்லை என்றனர் காவல்துறையினர்.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளும் அரசு பதவி விலக வேண்டும் எனக் கூறி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

