பிரசல்ஸ்: மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டணியான 'நேட்டோ'வில் பின்லாந்தும் சுவீடனும் விரைவில் உறுப்பினராக முடியும் என்று அவ்வமைப்பின் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் தெரிவித்துள்ளார்.
"நேட்டோவில் உறுப்பினராகச் சேர முடிவெடுத்தால், பின்லாந்தையும் சுவீடனையும் மகிழ்ச்சியோடு வரவேற்போம். அதற்கான செயல்முறை விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறேன்," என்று பிரசல்ஸ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திரு ஸ்டோல்டன்பர்க் கூறினார்.
இதன் தொடர்பில் பின்லாந்து அதிபருடன் பேசவிருப்பதாகவும் அவர் சொன்னார்.
அவ்விரு நாடுகளும் விண்ணப்பம் செய்வதற்கும் நேட்டோவில் இப்போது உறுப்பினராக உள்ள 30 நாடுகளும் ஒப்புதல் அளிப்பதற்கும் இடைப்பட்ட காலத்திற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்றும் அவர் உறுதிகூறினார்.
முன்னதாக, பின்லாந்தும் சுவீடனும் 'நேட்டோ'வில் இணைய முடிவெடுத்தால் எல்லைப் பகுதியில் அணுவாயுதங்களையும் அதிநவீன ஏவுகணைகளையும் நிறுத்திவைப்போம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது.
ரஷ்யாவும் பின்லாந்தும் 1,300 கிலோமீட்டர் நீளத்திற்கு நில எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ளன.

