பெய்ஜிங்: சீனாவின் குவாங்சோ நகரில் ஒருவரை கொவிட்-19 தொற்றியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதை அடுத்து, அந்நகரைச் சேர்ந்த 5.6 மில்லியன் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். அங்கு நூற்றுக்கணக்கான விமான சேவைகளும் ரத்துசெய்யப்பட்டன.
கடந்த 2019 டிசம்பர் மாதத்தில் முதன்முதலாகச் சீனாவில்தான் கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு அங்கு கொரோனா பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அங்கு கொரோனா பெருந்தொற்று தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது.
ஷங்ஹாய் நகரில் நாள்தோறும் கொரோனாவால் ஈரிலக்க உயிரிழப்பு பதிவாகி வருகிறது. அதேபோல், தலைநகர் பெய்ஜிங்கிலும் குறிப்பிடத்தக்க அளவில் கிருமித் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அக்கம்பக்க வட்டாரங்கள் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 தொற்றை அறவே ஒழிக்கும் கொள்கையுடன் இருக்கும் சீனா, பொது முடக்கம், பேரளவில் பரிசோதனை, பயணக் கட்டுப்பாடுகள் போன்ற வழிகளைக் கையாண்டு வருகிறது.
இந்நிலையில், சீனாவின் தென்பகுதியில் அமைந்துள்ள முக்கிய வணிக, உற்பத்தி மையமான குவாங்சோ நகரில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 பரிசோதனைகளில் ஒன்றில் 'இயல்புக்கு மாறான' முடிவு வந்ததை அடுத்து, அங்கு பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதனிடையே, தொழில்நுட்ப மையமான ஹாங்சோ நகரைச் சேர்ந்த 9.4 மி. மக்கள் 48 மணி நேரத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

