ஐநா தலைமைச் செயலாளர் உக்ரேனிய அதிபருடன் சந்திப்பு
கியவ்: ஐநா தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் உக்ரேன் தலைநகர் கியவ் சென்றுள்ள நிலையில், அந்நகர் மீது ரஷ்யப் படைகள் ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தின. இதனை ரஷ்யத் தற்காப்பு அமைச்சு உறுதி செய்தது.
ரஷ்யா ராணுவத்தின் மிகத் துல்லியமான, நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை, உக்ரேனின் கியவ்வில் உள்ள அர்டியோம் ஏவுகணை, விண்வெளி நிறுவனங்களின் உற்பத்தி கட்டடங்களைத் தாக்கி அழித்ததாக ரஷ்யா தெரிவித்தது.
ஐநா தலைமைச் செயலாளர் குட்டரெஸ், உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு திரும்பிய சில மணி நேரங்களில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
25 மாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்றை ஏவுகணை தாக்கியதில் 10 பேர் காயமடைந்தனர்.
சில வாரங்களுக்கு முன், கியவ்விற்கு வெளியே உள்ள படைகளைத் திரும்ப பெற்றுக் கொண்டிருந்த ரஷ்யா, கியவ்வில் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இத்தாக்குதல் பற்றி பேசிய ஸெலன்ஸ்கி, "எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதை இத்தாக்குதல் காட்டுகிறது. போர் முடிந்துவிட்டதாக எண்ணிவிடக்கூடாது," என்றார்.
ஐநாவை அவமதிக்கும் நோக்கில் ரஷ்யா இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளதாகவும் அவர் சொன்னார். ரஷ்யாவின் இத்தாக்குதல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக சொன்னார் குட்டரெஸ்.
இதற்கிடையே, மரியபோல் அசோவ்ஸ்டால் எஃகு ஆலையில் சிக்கியுள்ள உக்ரேன் வீரர்கள், மக்களை மீட்பதற்கு கியவ் திட்டமிட்டு உள்ளது.

