பெய்ஜிங்: பெய்ஜிங்கில் கிருமிப் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் நீண்ட வார இறுதியில் பெரும்பாலான மக்கள் வெளியிடங்களுக்குச் செல்லமுடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள், தொடர் பரிசோதனைகள் என மக்கள் விரக்தி அடைந்திருந்தாலும், இந்த நீண்ட வார இறுதிக்குப் பிறகு பெய்ஜிங் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குகிறது.
வரும் 5ஆம் தேதி முதல் பொது இடங்களுக்கும் பொதுப் போக்குவரத்திலும் செல்வதற்கு, முந்திய ஒரு வாரத்திற்குள் எடுக்கப்பட்ட கிருமித்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் பரிசோதனை சான்றிதழ் அவசியமாகிறது.
விளையாட்டு நிகழ்ச்சிகள், குழுவாக பயணம் செய்வது போன்றவற்றில் கலந்துகொள்வோர் முந்திய 48 மணி நேரத்திற்குள் தொற்று இல்லை என்பதை பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தவேண்டும்.
அத்துடன் அவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் நேற்று 10,700 தொற்றுச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை ஷாங்காயில் பதிவானவை. பெய்ஜிங்கில் 54 பேரைக் கிருமி தொற்றியது.
ஷாங்காயில் தற்போது கண்டறியப்படும் சம்பவங்கள் தனிமைப்படுத்தல் மையங்களோடு தொடர்புடையவை என்பதால், அங்கு சமூகப் பரவல் குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.
பல குடியிருப்புப் பகுதிகளில் முடக்கநிலை தளர்த்தப்பட்டுள்ளதாகவும் கிட்டத்தட்ட 1,000 நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் ஷாங்காய் நிர்வாகம் கூறியது.

