தோக்கியோ: உக்ரேன்மீது போர்தொடுத்ததன் மூலம் ரஷ்யா அனைத்துலக ஒழுங்குமுறைக்கு நேரடி மிரட்டலாக விளங்குவதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேய்ன் சாடியுள்ளார்.
தோக்கியோவில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய-ஜப்பானிய உச்சநிலை மாநாட்டில் நேற்று அவர் உரையாற்றினார்.
இந்த வருடாந்தரக் கூட்டத்தில் ஐரோப்பிய மன்றத் தலைவர் சார்ல்ஸ் மைக்கெல், ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா போன்றோருடன் இருதரப்பு உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
உக்ரேன் மீது மாஸ்கோ தொடுத்துள்ள போருக்கு அனைத்துலகச் சமூகம் கண்டனம் தெரிவித்துவரும் வேளையில், சீனாவின் ஆதிக்கம் குறித்தும் கவலை எழுந்துள்ளதாக உச்சநிலை மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
ஆசியாவில் ஐரோப்பிய ஒன்றியம் கூடுதலான நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவதாக ஐரோப்பியத் தலைவர்கள் கூறினர். ஆசியா தற்போது 'பதற்றங்கள் அரங்கேறும் மேடை'யாக விளங்குவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
பலதரப்பு உலக ஒழுங்குமுறையைத் தற்காத்து நடக்கும்படி சீனாவுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
தோக்கியோவில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய-ஜப்பானிய உச்சநிலை மாநாட்டில் சீனாவைப் பற்றி இழிவாகப் பேசவேண்டாம் என்று பெய்ஜிங் எச்சரிக்கை விடுத்த மறுநாள் ஐரோப்பியத் தலைவர்களின் இந்த வேண்டுகோள் வெளிவந்திருக்கிறது.

