கொழும்பு: இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க புதிய அமைச்சரவையை அமைக்க தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
ஆறாவது முறையாக அவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஒருபோதும் அவர் முழு தவணையை நிறைவு செய்ததில்லை.
இந்நிலையில், இலங்கையில் நேற்று 12 மணி நேரத்துக்கு
ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதற்கு முன்பு அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ராஜபக்சே குடும்பத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மிக மூர்க்கத்தனமான மோதலில் கிட்டத்தட்ட
ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
அதிபர் கோத்தபாய ராஜபக்சே, அப்போதைய பிரதமரும் அவரது சகோதரருமான மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று குரல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் இலங்கை மக்கள் களமிறங்கினர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளியல் நெருக்
கடிநிலைக்கும் அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறைக்கும் ராஜபக்சே குடும்பத்தினர் செய்த ஊழல்தான் காரணம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் போர்க் கொடி உயர்த்தினர்.
கடந்த பல வாரங்களாக
அமைதியான முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் திடீரென விஸ்
வரூபம் கண்டன.
தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டக்கார்கள் முகாமிட்டிருந்த இடங்களுக்குள் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேயின் ஆதர
வாளர்கள் நுழைந்து வன்
முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களுக்குத் தீவைக்கப்பட்டன. அதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களை ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்கினர்.
வெகுண்டெழுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பதிலடி கொடுக்க, 300க்கும் அதிகமானோர் காயமுற்றனர். நிலைமை கைமீறி சென்ற பிறகு வேறு வழியின்றி மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.
அவருக்குப் பதிலாக ரணில் விக்ரமசிங்க அப்பதவியைத் தற்போது வகிக்கிறார்.
அமைச்சரவையை அமைக்கும் மிகக் கடுமையான சவாலை எதிர்நோக்கும் ரணில், நேற்று நான்கு அமைச்சர்களை நியமித்தார்.
பொது நிர்வாக அமைச்சராக தினேஷ் குணவர்தன, வெளியுறவு அமைச்சராக பைரிஸ், நகர மேம்பாடு மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரசன்னா ரணதுங்க, மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சராக காஞ்சனா விஜிசேகர ஆகியோர் நேற்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
ரணில் மட்டுமே ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். அவருக்கு ராஜபக்சே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை பொதுசன முன்னணியின் ஆதரவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி ரணிலுக்கு ஆதரவு வழங்க மறுத்துவிட்டது. ஆனால் நாட்டின் பொருளியலை சீரான நிலைக்குக் கொண்டுவர ரணிலால் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்போவதாகப் பல்வேறு சிறிய கட்சிகள் தெரிவித்துள்ளன.
கோத்தபாய ராஜபக்சே தொடர்ந்து அதிபராக இருப்பதாலும் ராஜபக்சே குடும்பத்தினரின் ஆதரவுடன் ரணில் பிரதமராக பதவி ஏற்றிருப்பதாலும் இது கண்துடைப்பு நாடகம் என்று இலங்கை மக்களிடையே பேச்சு நிலவுகிறது.
இதைப் பிரதிபலிக்கும் வகையில் நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது சிலர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

