இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு விசாகத் தினத்தை முன்னிட்டு தளர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடு மிக மோசமான பொருளியல் நெருக்கடியைச் சந்தித்துவரும் சூழ்நிலையில், விசாகத் தினக் கொண்டாட்டங்கள் ஆரவாரமின்றி அமைதியான முறையில் இடம்பெற்றுவருகின்றன.
இலங்கையில் விசாகத் தினம் மிக முக்கியமான சமய நிகழ்ச்சி. நாடு முழுவதும் இது மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆனால் இவ்வாண்டு பொருளியல் சூழ்நிலையைக் காரணம்காட்டி அரசாங்கம் ஏற்பாடுகளுக்குச் செய்யவில்லை. மக்கள் தங்கள் சொந்த கொண்டாட்டங்களை மேற்கொள்ளும்படி அரசாங்கம் கூறியுள்ளது.
இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக விசாகத் தினக் கொண்டாட்டங்களுக்குத் தடங்கல் ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகை அன்று நடத்தப்பட்ட தாக்குதல், 2020, 2021ஆம் ஆண்டுகளில் கொவிட்-19 தொற்று ஆகிய காரணங்களால் விசாகத் தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாட முடியவில்லை.
இந்நிலையில் ஊரடங்கு முழுமையாக மீட்டுக்கொள்ளப்பட்டதா அல்லது இது தற்காலிக தளர்வா என்பது குறித்த தகவல்களை அந்நாட்டு அரசாங்கம் தெரிவிக்கவில்லை.
அரசாங்க ஆதரவாளர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மூண்ட கலவரத்தில் ஒன்பது பேர் மாண்டனர், 225க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

