கியவ்: ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரேனின் இசியம் நகருக்கு அருகில் உக்ரேனியப் படையினர் எதிர்த் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அதன் ஆளுநர் கூறினார்.
இது, டோன்பாஸ் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் ரஷ்யாவின் திட்டங்களுக்குக் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
கியவ்வை முழுமையாகக் கைப்பற்ற முடியாத ரஷ்யப் படைகள் சென்ற 19ஆம் தேதி முதல், ரஷ்ய ஆதரவாளர்கள் நிறைந்த டோன்பாஸ் பகுதியைக் கைப்பற்றுவதில் மும்முரம் காட்டின.
இதற்கிடையே, வடகிழக்கு உக்ரேனின் கார்கிவ் பகுதியை உக்ரேனியப் படைகள் மீண்டும் கைப்பற்றிய பிறகு, இரண்டு நாள்களுக்கு முன் அங்கிருந்தும் ரஷ்யப் படைகள் வெளியேறின.
டோன்பாஸில் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா தொடர்ந்து முயற்சிப்பதாகவும் அதனால், அங்கு மிகவும் கடினமான சூழல் நிலவுவதாகவும் உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி கூறினார்.
இந்நிலையில், டோன்பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் உக்ரேனிய ராணுவத் தளங்கள்மீது தமது படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 100 உக்ரேனியப் படையினர் மாண்டுவிட்டதாக ரஷ்யா கூறியுள்ளது.
'புட்டினைப் பதவி நீக்க சதி'
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைப் பதவியில் இருந்து நீக்குவதற்கான சதி நடைபெற்று வருவதாகவும் அதை நிறுத்தமுடியாது என்றும் உக்ரேனின் உயர் ராணுவ அதிகாரி சொன்னார்.
உக்ரேனின் ராணுவத் தளபதி கைரிலோ புடானோவ் ஸ்கை நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "ஆகஸ்ட் நடுப்பகுதியில் உக்ரேன்-ரஷ்யா போர் ஒரு திருப்புமுனையை எட்டும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் போர் முடிவடையக்கூடும்," என்றார்.
இப்போரில் ரஷ்யா தோற்றுவிட்டால், புட்டின் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் அவர் சொன்னார். மேலும் புட்டினுக்குப் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் இருப்பதாகவும் உளவியல், உடல்நல ரீதியாக புட்டின் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

