சோல்: வடகொரியாவில் கிருமித்தொற்று காரணமாக இதுவரை
42 பேர் மாண்டுவிட்டனர்.
உலகம் முழுவதும் கொள்ளைநோய் பரவத் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வடகொரியாவில் சென்ற வியாழக்கிழமைதான் முதல்முறையாக கிருமிப் பரவல் உறுதிப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அங்கு நேற்று நான்காவது நாளாக முடக்கநிலை நடப்பில் இருந்தது.
சென்ற 12ஆம் தேதி முதல் வடகொரியாவின் அனைத்து நகரங்களும் மாவட்டங்களும் ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்சாலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடப்பதாகவும் கேசிஎன்ஏ ஊடகச் செய்தி கூறியது.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்த வடகொரியா 'விரைவான அவசர நடவடிக்கைகளை' எடுத்து வருவதாக அச்செய்தி குறிப்பிட்டது.
ஓமிக்ரான் கிருமிப் பரவல் குறித்து சரியான புரிதல் இல்லாததும், அதற்கான சரியான சிகிச்சை முறை பற்றிய தெளிவு இல்லாததால் மருந்துகளை எடுத்துக்கொள்வதில் கவனக்குறைவாக இருந்ததுமே பெரும்பாலான உயிர்இழப்புக்குக் காரணம் என்கிறது
கேசிஎன்ஏ செய்தி.
குறைந்தது 296,180 பேரிடம் காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டதாகவும் ஞாயிற்றுக்கிழமை அன்று மேலும் 15 பேர் மாண்டுவிட்டதாகவும் அது சொன்னது.
வடகொரியாவில் ஒட்டுமொத்தமாக 820,620 பேருக்குத் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. 324,550 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
கிருமிப் பரவலை எதிர்த்துப் போராடி வருவதாக வடகொரியா சொன்னாலும் அனைத்துலக அளவிலான தடுப்பூசி திட்டங்களை, அது ஏற்றுக்கொள்வதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.

