நியூயார்க்: நியூயார்க்கில் பத்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது இளைஞன் முன்பே ஒழுங்கற்ற நடத்தைக்காக விசாரிக்கப்பட்டவன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க்கின் பிங்ஹாம்டனுக்கு வெளியே உள்ள சஸ்கியூஹான்னா வேலி உயர்நிலைப் பள்ளியில் கல்வி யாண்டின் இறுதியில் மாணவர் களின் திட்டம் பற்றி கருத்தறியப்பட்டது. அப்போது பேடன் ஜென்ட்ரன் என்ற மாணவர், கொலையும் தற்கொலையும் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார் என்று நியூயார்க் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரித்து வரும் சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறினர்.
தாம் நகைச்சுவையாக அதை கூறியதாக மாணவர் தெரிவித்தாலும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
ஜென்ட்ரன், ஜூன் 8ஆம் தேதி மனநல சுகாதாரச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாகவும் ஞாயிறு அன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மனநலச் சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த இளைஞன் ஒரு சில நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டான். இரண்டு வாரங்களில் மாணவர் பட்டமளிப்பு முடிந்ததும் விசாரணை வளையத்திலிருந்து அவன் தப்பினான்.
இந்த நிலையில் கடந்த சனிக் கிழமை அன்று 320 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு நியூயார்க்கில் உள்ள பஃப்ளோவுக்கு வந்த ஜென்ட்ரன், கறுப்பினத்தவர்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் உள்ள 'டாப்ஸ்' பேரங்காடிக்கு வெளியேயும் உள்ளேயும் துப்பாக்கியால் சுட்டதில் பத்து பேர் கொல்லப்பட்டனர். மூவர் படுகாயம் அடைந்தனர். தனது கழுத்து மீது துப்பாக்கியை வைத்து தன்னை மாய்த்துக் கொள்ளப் போவதாக மிரட்டிய அவனை காவல்துறையினர் சமா தானப்படுத்தி கைது செய்தனர். அதே நாளில் அவன் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது.
இதற்கிடையே நேற்று லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். ஐந்து பேர் காயம் அடைந்தனர். லகுனா உட்லண்சில் உள்ள ஜெனிவா தேவாலயத்துக்குச் சென்று கொண்டிந்தவர்களை நோக்கி துப்பாக்கிக்காரன் சுட்டதாக தெரிவிக்கப்பட்டது.
"காயம் அடைந்தவர்கள் மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்," என்று ஆரஞ்சு வட்டார ஷெரிஃப் அலுவலகம் டுவிட்டர் பதிவில் தெரிவித்தது.
சந்தேக நபரை தேவாலய உறுப்பினர்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர் அறுபது வயது மதிக்கத்தக்க ஆசியர் என நம்பப்படுவதாக ஷெரிஃப் அலுவலகம் குறிப்பிட்டது. துப்பாக்கிக்காரனின் நோக்கம் தெரியவில்லை.