பியோங்யாங்: வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருந்துகள் விநியோகிக்கும் பணிக்காக அந்நாட்டு அரசு ராணுவ வீரர்களை களமிறக்கியுள்ளது.
மருந்தகங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள தவறிய சுகாதார அதிகாரிகளை அதன் அதிபர் கிம் ஜோங் உன் கடுமையாக சாடினார்.
இந்நிலையில், வடகொரிய அரசாங்கம் அவசரமாக தமது ராணுவ வீரர்களை மருந்தகங்களுக்கு அனுப்பியுள்ளதோடு, 24 மணி நேரமும் மருந்துகளை விநியோகிக்கத் தொடங்கியுள்ளது என்று வடகொரியாவின் கேசிஎன்ஏ செய்தி கூறியது.
இப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள வடகொரிய ராணுவத்தின் மருத்துவப் பிரிவு வீரர்கள் பியோங்யோங்கில் அணிவகுத்து நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, கிருமிப் பரவல் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை அரசாங்கம் முடுக்கிவிட்டு உள்ளது.
வடகொரியாவில் யாரும் கிருமித்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று கூறப்படும் நிலையில், தொற்றுக்கு ஆளானவர்களுக்கு வலிகுறைப்பு, காய்ச்சல் மருந்துகள் மட்டுமல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்தும் தரப்படுகின்றன.
அத்துடன் உப்பு தண்ணீர் கொப்பளித்தல், மருந்து தேநீர் போன்ற வீட்டு வைத்தியங்கள் செய்துகொள்ளவும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

