கொழும்பு: இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிமிக்க சூழலில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுசரிக்கப்பட்டன.
கடந்த காலங்களில் இத்தகைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பொதுவாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கை வடகிழக்கில் மட்டுமே நடத்தப்படும்.
அதோடு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தின் தீவிர எதிர்ப்பும் இருக்கும். இந்த ஆண்டு அத்தகைய எதிர்ப்புகள் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின் அதிபர் செயலகம் அருகிலேயே இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகி
றது.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதாரச் சிக்கலைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்களால் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக நேரிட்டது.
அதிபர் கோத்தபாய ராஜபக்சேவும் பதவி விலகக் கோரி காலிமுகத் திடலில் மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காலிமுகத்திடலிலேயே நேற்று முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து அஞ்சலி செலுத்தியதாக பிபிசி தமிழ்ச் செய்தி கூறுகிறது.
இதனிடையே முள்ளிவாய்க்காலில் இறுதிப் போர் நடந்த இடத்தில் மக்கள் நினைவேந்தல் நடத்த கூடியிருந்தார்கள்.
வழக்கமாக தடுப்பதுபோல இந்த முறை ராணுவத்தினர் இந்த நிகழ்வைத் தடுக்கவில்லை.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்குப் பகுதியைத் தனி நாடாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையில் 30 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்துவந்தது.
இதன் கடைசிக் கட்டப் போர், முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009ஆம் ஆண்டு மே 17-18 ஆகிய தேதிகளில் நடந்தது.
அப்போது, சிறு பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் விடுதலைப் புலிகளும் சிக்கிக்கொண்டனர்.
இவர்களைச் சுற்றி வளைத்த இலங்கை ராணுவம் கொடூரமான தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானது.

