கோலாலம்பூர்: மலேசியாவின் தேசிய பதிவுத் துறையின் தகவல்கள் கசிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
1940ஆம் ஆண்டுக்கும் 2004ஆம் ஆண்டுக்கும் இடையில் பிறந்த 22.5 மில்லியன் மலேசியர்களின் தகவல்கள் வேண்டுமென்றே திருடப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன,
மொத்தம் 160 ஜிபி அளவுக்குச் சேமிக்கப்பட்டு இருக்கும் அந்தத் தகவல்கள் இணையத்தின் ரகசியத் தளத்தில் US$10,000 (S$13,846) விலைக்கு விற்கப்பட்டு வருவதாக அமான்ஸ் என்ற உள்நாட்டு தொழில்நுட்ப இணையக் களஞ்சியம் தெரிவிக்கிறது.
மலேசியாவில் சென்ற ஆண்டு செப்டம்பரில் இதுபோல பல தகவல்களும் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.
அந்த இரண்டு சம்பவங்களிலுமே 'மை ஐடென்டிட்டி செயலி மூலம் தேசிய பதிவுத் துறையிடம் இருந்து தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
'மை ஐடென்டிட்டி' என்பது பல்வேறு அரசாங்க அமைப்புகள் பயன்படுத்தும் பொதுவான மையப்படுத்தப்பட்ட தகவல் பகிர்வு தளமாகும்.
இதுபற்றி கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் ஹம்சா சைநூதீன் தேசியப் பதிவுத் துறையில் எந்த ஊடுருவலும் இடம் பெறவில்லை என்று மறுத்துவிட்டார்.
ஆனால், தகவல் பதிவுத்துறையின் தகவல்களைப் பெறுவதற்குப் பல்வேறு அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
சென்ற செப்டம்பர் மாதம் நடந்த இதேபோன்ற தகவல் திருட்டின்போது, அது தேசிய பதிவுத் துறையில் இருந்து கசியவில்லை என்பதைத் தங்களால் நிரூபிக்க முடிந்ததை அவர் குறிப்பிட்டார். அப்போது, 1979-1998ஆம் ஆண்டுக்கும் இடையில் பிறந்தவர்களின் தகவல்கள் திருடப்பட்டன.
தேசிய பதிவுத் துறை தகவல்கள் வலுவான பாதுகாப்பு உள்ளவை. எனவே, யாரும் கவலைப்பட வேண்டாம் என்றார் அவர்.
கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும்படி 'மை ஐடென்டிட்டி' தகவல் பகிர்வுத் தளத்தைப் பயன்படுத்துவோருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
இது பற்றி கருத்துத் தெரிவித்த ஃபூங் செங் லியோங் என்ற வழக்கறிஞர், மலேசியாவில் தகவல் கசிவு தொடர்பான புலன்விசாரணைகள் வெளிப்படையாக இல்லை என்றும் இது எரிச்சலாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
தனிப்பட்டோர் தகவல் பாதுகாப்புத் துறையும் மலேசிய இணையப் பாதுகாப்பு அமைப்பும் இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. தேசிய பதிவுத் துறையும் எதுவும் கூறவில்லை.

