கியூபெக்: கனடாவில் 13 பேருக்குக் குரங்கம்மை தொற்றியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அண்டை நாடான அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குச் சென்ற ஒருவரை அம்மை தொற்றியதாகக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்குக் காய்ச்சல், உடல்வலி, வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள் ஆகிய அறிகுறிகள் முதலில் தென்படும். பின்னர் சின்னம்மை உடல், முகம் முழுவதும் பரவுகிறது.
கனடாவின் கியூபெக் நகரில் 13 பேரைக் குரங்கம்மை தொற்றியிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் அதன் பரவல் குறித்து விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் குணமடைந்து வருவதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையம் சொன்னது. அவரால் பொதுமக்களுக்கு அபாயம் இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் குரங்கம்மை பரவி வருகிறது.
பிரிட்டனில் இதுவரை ஒன்பது பேரிடம் அது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஸ்பெயினில் 23 பேரும் போர்ச்சுகலில் நான்கு பேரும் இதுவரை குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, இந்நாடுகளில் குரங்கம்மை பதிவாகவில்லை.
பாதிக்கப்பட்டவரின் உடல் திரவங்கள் அல்லது புண்ணுடன் தொடர்பில் இருக்கும் துணி, படுக்கை போன்றவற்றை மற்றொருவர் தொடும்போது கிருமி பரவுகிறது. வீட்டைச் சுத்தப்படுத்தும் கிருமி நாசினியைப் பயன்படுத்தி கிருமியை எளிதில் அழிக்கலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
பெரும்பாலும் பாலியல் உறவு மூலம் அம்மை பரவுவதாகக் கூறப்பட்டது. குறிப்பாக ஓரினச் சேர்க்கையாளர்களிடையே இந்நோய் அதிகமாகப் பரவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் ஏற்படும் நோயான இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவலாக பரவி வருவது குறித்து மேலும் ஆராய்ச்சி நடத்த உலக சுகாதார நிறுவனம் உத்தரவிட்டு உள்ளது.
கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிகமானோர் பயணம் மேற்கொள்ளும் நிலையில், ஆப்பிரிக்காவிலிருந்து மற்ற நாடுகளுக்கு குரங்கம்மை பரவுவதாக நம்பப்படுகிறது.
குரங்கம்மை முதன்முதலில் 1958ல் குரங்குகளிடம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.