வாஷிங்டன்: அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கம், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆகியவற்றுக்கு இடையில் இந்தோ-பசிபிக் வட்டாரத்திற்கான அமெரிக்காவின் ஆதரவை வலுப்படுத்தும் நோக்கில் தமது முதல் ஆசியப் பயணத்தைத் தொடங்கிஉள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று மாலை தென்கொரியா சென்று சேர்ந்தார்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் 'குவாட்' எனும் நான்கு தரப்பு கூட்டமைப்பின் உச்சநிலை சந்திப்பு ஜப்பானில் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் செல்கிறார். அதற்கு முன்னதாக நேற்று தென்கொரியாவுக்குச் சென்றார் பைடன்.
அதன் பிறகு அவர் நேராக, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் குறைகடத்தி தொழிற்சாலைக்குச் சென்றார். அங்கு தென்கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக் யோலைச் சந்தித்தார் பைடன்.
தென்கொரிய அதிபருடன் இணைந்து தொழிற்சாலையைப் பார்வையிட்ட பிறகு பேசிய பைடன், அமெரிக்காவும் ஒரேமாதிரியான எண்ணம் கொண்ட கூட்டாளிகளும் ஒருவருக்கொருவர் முதலீடு செய்ய வேண்டிய நேரம் இது என்று கூறினார்.
"இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் நெருங்கிய பிணைப்பை இந்த ஆலை பிரதிபலிக்கிறது," என்றும் சொன்னார்.
தென்கொரியா, அமெரிக்க நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் முதலீடு செய்வதற்குச் சலுகைகள் வழங்கபடவேண்டும் என்று பைடனிடம் தென்கொரிய அதிபர் வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் டெக்சாஸில் சாம்சங் நிறுவனத்தின் 17 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய குறைகடத்தி உற்பத்தி தொழிற்சாலையை நிறுவத் திட்டமிடப்பட்டு உள்ளது.
பைடனின் இந்தப் பயணம் ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

