வாஷிங்டன்: டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு அவர் தனி விமானத்தில் பறந்தபோது அதில் இருந்த பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டார் என்றும் அந்த தவறை மறைப்பதற்காக 2018ஆம் ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மூலம் $250,000 தொகை கொடுக்கப்பட்டதாகவும் பிஸினஸ் இன்சைடர் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.
விமானப் பணிப்பெண்ணின் பெயர் வெளியிட விரும்பாத தோழி ஒருவர், இதுபற்றி கூறியதாக அச்செய்தி கூறியது.
தம்மீதான இந்தக் குற்றச்சாட்டை மறுத்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த மஸ்க், "நான் கருத்து சுதந்திரம் பற்றி பேசி வருகிறேன். அதில் ஒரு பகுதியாக பைடன் அரசாங்கத்தையும் விமர்சித்து வருகிறேன். இதனால் என்மீது அரசியல் ரீதியான தாகுதல்கள் தொடங்கப்பட்டுள்ளன. என்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை.
"ஆனால் இந்த அவதூறுகள் எல்லாம் சிறந்த எதிர்காலத்திற்காக போராடுவதில் இருந்தும் பேச்சுரிமை சுதந்திரம் குறித்து பேசுவதில் இருந்தும் என்னை தடுக்க முடியாது," என்று பதிவிட்டுள்ளார்.