சோல்: வடகொரியாவில் கிட்டத்தட்ட 2 மில்லியனுக்கும் அதிகமானோருக்குக் காய்ச்சல் உள்ள நிலையில், கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நல்ல பலன் கிடைத்து வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி, அங்கு ஒட்டுமொத்தமாக 2.24 மில்லியன் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 65 பேர் மாண்டுவிட்டதாகவும் கேசிஎன்ஏ செய்தி கூறுகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேருக்குத் தொற்று உள்ளது என்பது கூறப்படவில்லை.
கிருமிப் பரவலுக்கு மத்தியில், விவசாயம், தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்படுவதாகவும் அச்செய்தி சொன்னது.
சுகாதார கட்டமைப்பு, வளங்கள் உள்ளிட்டவற்றில் பின்தங்கியுள்ள வடகொரியா மனிதாபிமான நெருக் கடியை எதிர்கொள்வதற்கான வாய்ப்பு உள்ள நிலையிலும் அனைத்துலக உதவிகளை ஏற்க மறுத்து வருகிறது.
கிருமிப் பரவலைச் சமாளிக்க உதவுவதாக அமெரிக்காவும் தென்கொரியாவும் விடுத்த அழைப்பிற்கு வடகொரியாவிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.
அதேபோல், கிருமிப் பரவல் நிலவரம் குறித்து தகவல்களை அளிக்குமாறு உலகச் சுகாதார நிறுவனம் கேட்டதற்கும் அதனிடம் இருந்து தகவல் இல்லை.
இருப்பினும் வடகொரியா, சீனாவின் உதவியை நாடியிருப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. ஆனால், அதை இருநாடுகளும் உறுதி செய்யவில்லை.
தொற்றைச் சமாளிப்பதற்கான மருத்துவப் பொருள்களைக் கொண்டு வருவதற்காக சீனாவிற்கு வடகொரியா விமானச் சேவைகளை இயக்குவதாக பெயர் வெளியிடப்படாத தகவல்களை மேற்கோள்காட்டி தென்கொரியா செய்தி வெளியிட்டு உள்ளது.

