மாஸ்கோ: உக்ரேனில் தங்களுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளதாகவும் துறைமுக நகரான மரியபோல் முற்றிலும் தங்கள்
வசமாகிவிட்டதாகவும் ரஷ்யா அறிவித்தது.
அந்த நகரைக் கிட்டத்தட்ட மூன்று மாத காலம் ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டு இருந்தன.
கடைசியில் மரியபோல் நகரம்
ஒன்றுமில்லாமல் நாசமாகி சீரழிந்து குப்பைகூளங்களாகிவிட்டது.
மரியபோல் நகரைக் கைப்பற்ற நடந்த மோதலில் 20,000க்கும் மேற்பட்ட குடிமக்கள் மாண்டுவிட்டதாக அஞ்சப்படுகிறது.
அந்த நகரில் இருக்கும் அசோவ்ஸ்டால் என்ற எஃகு ஆலை முற்றிலும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அந்த நகரம் முழுவதும் ரஷ்யா வசம் வந்துவிட்டதாகவும் ரஷ்யத் தற்காப்பு அமைச்சர் செர்கி ஷோய்கு ரஷ்ய அதிபர் புட்டினிடம் தெரிவித்ததாக பேச்சாளர் இகோர் கொனாஷ்ன்கோவ் கூறினார்.
இருப்பினும், இதை உக்ரேன் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
அந்த ஆலையில் அடைபட்டு இருந்த 2,439 உக்ரேனிய வீரர்கள் சரண் அடைந்துவிட்டதாக ரஷ்ய அமைச்சு கூறியதாக ஆர்ஐஏ நொவோஸ்டி என்ற ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்தது. சரண் அடைந்தவர்களை ரஷ்யர்கள் கைது செய்தனர்.
அந்த ஆலை 11 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. பல வாரங்களாக அங்கு மோதல் நடந்து வந்தது.
மரியபோல் நகர் முற்றிலும் ரஷ்யா வசமாகி இருப்பது அதிபர் புட்டினுக்குப் பெரும் தெம்பாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் உக்ரேனின் தென்கிழக்கு டொன்பாஸ் வட்டாரத்தில் கடைசியாக எஞ்சி இருக்கும் உக்ரேன் பகுதியான லுஹான்ஸ்க் என்ற பகுதியைப் பிடிக்க ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் நேற்று தகவல்கள் தெரிவித்தன.
இதனிடையே, உக்ரேனில் ரஷ்யப் படைகள் ஏற்படுத்தி இருக்கும் நாச வேலைகளுக்கு ஈடாக மாஸ்கோவிடம் இருந்து இழப்பீடு பெறும் வகையில் தன் தோழமை நாடுகளுடன் முறையான உடன்பாடு செய்துகொள்ள விரும்புவதாக உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி கூறினார். உக்ரேனை முடிந்தவரை துடைத்து ஒழிக்க ரஷ்யா முடிவு செய்துவிட்டது என்று தெரிவித்த அவர், அத்தகைய உடன்பாடு இத்தகைய காரியங்களைச் செய்யும் நாடுகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றார்.