பெரும்பான்மை வெற்றியை நோக்கி ஆஸ்திரேலிய தொழிற் கட்சி
சிட்னி: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் ஆண்டனி அல்பனிஸ், உலக நாடுகளுடனான ஆஸ்திரேலியாவின் உறவுகளைச் சீரமைக்க போவதாகவும் பருவநிலை மாற்றத்தைக் கையாள்வதில் பின்தங்கியுள்ள நாடு என்ற பெயரை மாற்றுவேன் என்றும் உறுதி கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியத் தேர்தல், அங்கு கடந்த பத்தாண்டுகளாக நீடித்த லிபரல் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
ஆண்டனி அல்பனிஸ் தலைமையிலான தொழிற் கட்சி நேற்று மாலை நிலவரப்படி 71 இடங்களை வென்றுள்ளதாகத் தெரிகிறது. மேலும் பல இடங்களில் அக்கட்சி முன்னிலையில் உள்ளது. எனவே, பெரும்பான்மைக்குத் தேவையான 76 இடங்கள் அக்கட்சிக்குக் கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.
ஸ்காட் மோரிசன் தலைமையிலான கூட்டணி 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
உலக நாடுகளின் தலைவர்கள் வெற்றி பெற்ற அல்பனிசிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
முக்கிய அமைச்சர்களுடன் அல்பனிஸ் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தோக்கியோவில் நடைபெறவுள்ள குவாட் நாடுகளின் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள அல்பனிஸ் ஜப்பான் செல்லவுள்ளார். மாநாட்டிற்குப் பிறகு அமெரிக்க அதிபர், இந்தியப் பிரதமர், ஜப்பானியப் பிரதமர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்வார்.
இந்நிலையில் பேசிய ஆண்டனி அல்பனீஸ், "நம் நாட்டில் அரசியல் செயல்பாட்டு முறையை மாற்ற விரும்புகிறேன்," என்றார்.
தற்போதைய நிலையில் குவாட் மாநாடு மிகவும் முக்கியமானது என்ற அவர், "வெளிநாட்டு பங்காளிகள் நம்மிடம் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாக, பருவநிலை மாற்றம், அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் நம்முடைய போக்கில் மாற்றம் அவசியம்," என்றார்.
ஆஸ்திரேலியாவை எரிசக்தியில் வல்லரசு நாடாக உருவாக்க தாம் பாடுபடப் போவதாகவும் அவர் சொன்னார்.

