அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் கேலார்ட் பகுதியில் திடீர் சூறாவளி தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். விண்ணை நோக்கி தூக்கி அடித்த சூறாவளிக் காற்றில் 44 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மணிக்கு 140 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் முன்னெச்சரிக்கை விடுத்திருந்தாலும் திடீரென்று வீசிய சூறாவளி அப்பகுதியில் உள்ள வீடுகளைத் தரைமட்டமாக்கியது. பல கட்டடங்கள், கடைகளின் மேற்கூரைகள் சூறாவளி காற்றில் தூக்கிவீசப்பட்டதாக மாநிலக் காவல்துறையினர் தெரிவித்தனர். சாலையில் மரங்கள், மின்கம்பிகள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் சூறாவளி காற்று, தீச்சம்பவத்தையும் ஏற்படுத்தியது.
படம்: ராய்ட்டர்ஸ்