நியூயார்க்: உக்ரேன் போரால் உலகப் பொருளியல் சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனைத்துலகப் பணநிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதில் பல்லாண்டு காலமாக ஏற்பட்டு வந்துள்ள உலக பொருளியல் ஒருங்கிணைப்புக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் இதனால் ஏழை நாடுகள் மேலும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அது கூறியது. அப்படியொரு நிலை ஏற்பட்டால் அந்த ஏழை நாடுகளுக்கு அது மேலும் ஆபத்தாக முடியும் என்று நிதியம் கூறியது.
உணவு, எரிசக்தி, மற்றும் முக்கிய பொருள்களின் வர்த்தகத்தை 30க்கும் மேற்பட்ட நாடுகள் கட்டுப்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜியேவா, நாடுகள் வர்த்தகத் தடைகளை நீக்கி பற்றாக்குறையை போக்குவதுடன் பொருள்களின் விலைகளை குறைக்க உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேற்கூறிய கருத்துகளை திருவாட்டி ஜார்ஜியேவா நிதியத்தின் முதன்மை துணை நிர்வாக இயக்குநரான திருவாட்டி கீதா கோபிநாத் என்பவருடன் தமது வலைப்பதிவில் வெளியிட்டார்.
நாடுகள் தங்கள் இறக்குமதிகளை பல்வேறு நாடுகளிலிருந்து பெற்று, விநியோகத் தொடரை வலுப்படுத்திக் கொண்டு இடையூறுகளால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கவேண்டும் என்று அவர்கள் விளக்கினர்.
அத்துடன், பாதிப்படையக்கூடிய நிலையில் இருக்கும் நாடுகளை மீட்க உதவும் வகையில், உலகின் 20 பணக்கார நாடுகள் தங்களது பொதுக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கடன்பட்டிருக்கும் நாடுகளின் கடன்சுமையை மறுசீரமைக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
"பொருளியல் ஒருங்கிணைப்பு சிதறினால் அதனால் பல நாடுகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும். இதனால், அனைத்து தரப்பு மக்களும், நிபுணர்கள், நடுத்தர வருவாய் ஈட்டும் ஆலைத் தொழிலாளர்கள், குறைந்த வருவாய் ஈட்டும் ஊழியர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவர்," என இவர்கள் கூறுகின்றனர்.
இதில் பணவீக்கம் மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் அது அதிக ஏற்ற இறக்கத்துடன் விளங்கும் என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனைகள் நவீனமாக்கப்பட்டு, செலவுகளைக் குறைத்து பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்த நாடுகள் ஒன்றிணைந்து பொதுவான மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை தளத்தை உருவாக்கவேண்டும் என இவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

