தோக்கியோ: ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அங்கு புதிய இந்தோ-பசிபிக் பொருளியல் மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். இதில் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் அங்கம் வகிக்கும் என்றும் திரு பைடன் தெரிவித்துள்ளார்.
'ஐபிஇஎஃப்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பை திரு பைடன் தமது ஜப்பானியப் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று ஜப்பானியப் பிரதமர் திரு ஃபூமியோ கிஷிடாவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் அறிவித்தார்.
பின்னர், குவாட் எனப்படும் இவ்வட்டாரப் பாதுகாப்பு அமைப்பில் கலந்துகொண்ட திரு பைடன், "இந்த 21ஆம் நூற்றாண்டில் நடைபெறும் போட்டியில் நாம் ஒன்றிணைந்து வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது," என்று புதிய பொருளியல் மன்ற அறிவிப்பின் போது கூறினார்.
இந்தப் புதிய பொருளியல் மன்ற அறிவிப்பில் அதிபர் பைடன், இந்தியப் பிரதமர் மோடி, ஜப்பானியப் பிரதமர் திரு கிஷிடா ஆகியோர் நேரில் கலந்துகொண்டனர். இந்த மன்றத்தின் மற்ற உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மெய்நிகராகக் கலந்துகொண்டதாக ஏஎஃப்பி செய்தித் தகவல் கூறுகிறது.
"இந்த 21ஆம் நூற்றாண்டில் பொருளியல் போட்டித்தன்மையை உறுதிசெய்யும் பொருட்டு அதில் அடங்கியுள்ள முக்கிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இவ்வட்டாரத்தின் நமது அணுக்க நண்பர்கள், பங்காளிகள் ஆகியோருடன் ஒத்துழைக்க மேற்கொண்டுள்ள கடப்பாடுதான் இந்த பெருளியல் மன்றம்," என்று திரு பைடன் விளக்கினார்.
மற்ற வர்த்தக அமைப்புகளைப் போல், இந்தப் பொருளியல் அமைப்பின் உறுப்பினர்கள் வரிகள் குறித்தோ சந்தைகளை எளிமைப் படுத்துவது பற்றியோ பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டார்கள் என்று கூறிய அமெரிக்க அதிபர், மாறாக, இந்த அமைப்பு நாடுகள் மின்னிலக்கப் பொருளியல், விநியோகத் தொடர், தூய எரிசக்தி கட்டமைப்பு, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களில் பொதுவாக ஏற்புடைய தரநிலைகளில் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்தும் என்று தெரிவித்தார்.
இந்த அமைப்பில் அமெரிக்காவுடன், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தோனீசியா, புருணை, நியூசிலாந்து, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா, தாய்லாந்து, வியட்னாம் போன்ற நாடுகளும் இடம்பெற்று உள்ளன.
"வெளிப்படையான, திறந்த, அனைவரையும் உள்ளடக்கிய, மீள்திறன்மிக்க, பாதுகாப்பான, வளமான இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம்," என்று இந்த நாடுகளின் கூட்டறிக்கை தெளிவுபடுத்தியது.
ஜப்பானில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்படுத்திய புதிய இந்தோ-பசிபிக் பொருளியல் மன்றம் திறந்த அமைப்பாக, அனைவரையும் உள்ளடக்கியதாக, நீக்குப்போக்கான ஒன்றாக இருக்க வேண்டும் என்று அந்த மன்றத்தின் அறிவிப்பு நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு பேசிய பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்த அமைப்பு அதன் உறுப்பு நாடுகள் பங்காளிகளாக தொடர ஏதுவாக பல்வேறு நாடுகளுக்கு இடையிலான வேறுபட்ட ஒத்துழைப்பு சூழலில் பங்கேற்கும் விதமாக அமைந்திருக்கவேண்டும் என்று பிரதமர் கூறினார். மேலும், மற்ற நாடுகள் அந்த அமைப்பில் உறுப்பினர்களாகச் சேர தயார்நிலையில் இருக்கும்போது, அவர்களைச் சேர்த்துக் கொள்ள வழிவகுக்கவேண்டும் என்றும் திரு லீ விளக்கினார்.
இந்த நிகழ்வில் மெய்நிகர் வழியாகக் கலந்துகொண்ட பிரதமர், "ஐபிஇஎஃப் அமைப்பை சிங்கப்பூர் வரவேற்கிறது. திறந்த, அனைவரையும் உள்ளடக்கிய சட்டம், விதிமுறைகளின் அடிப்படையில் இயங்கி நிலைத்தன்மை, பாதுகாப்பு, வளம் ஆகியவற்றை உறுதிசெய்யும் அமைப்பை நாங்கள் என்றுமே வரவேற்றுள்ளோம்," என்று திரு லீ தெரிவித்தார்.

