டெக்சஸ்: மாணவர்களை பலிவாங்கிய டெக்சஸ் பள்ளித் துப்பாக்கிச் சூடு குறித்து வேதனை தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் பைடன் அந்நாட்டின் துப்பாக்கிக் கொள்கைக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி பேசிய அவர், "இதுபோன்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் உலகின் மற்ற பகுதிகளில் அரிதாகவே நடக்கின்றன. ஆனால் நாம் இதனை ஏன் மிக சாதாரணமாகக் கடந்து செல்கிறோம். துப்பாக்கிக் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
"துப்பாக்கிச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அமெரிக்கர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
"தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும்," என்றார்.
எந்தக் காரணமும் இல்லாமல், யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்திருக்க உதவுகிறது அமெரிக்காவின் தற்போதைய துப்பாக்கிச் சட்டம். அமெரிக்காவில் கடந்த ஆண்டு 61 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 52 விழுக்காடு அதிகம் என்பது மட்டுமல்லாமல், கடந்த 20 ஆண்டுகளில் அதிகபட்ச எண்ணிக்கை என்றும் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் துப்பாக்கிச் சட்டத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் எனவும் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்கவேண்டும் எனவும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறிஉள்ளார்.