ஷாங்காய்: கொவிட்-19 கட்டுப்பாடு களால் மூன்று மாதங்களாக ஷாங்காய் நகரில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
சில குறிப்பிட்ட உயர்நிலைப் பள்ளிவகுப்புகள் ஜூன் 6ஆம் தேதி முதல் மீண்டும் நேரடியாக நடைபெறும் என்று ஷாங்காய் அரசாங்கப் பள்ளித் துறை ஆணையத்தின் அதிகாரி யாங் ஸென்ஃபெங் நேற்று கூறினார்.
மார்ச் 12ஆம் தேதிக்குப் பின்னர் அந்த நகரத்தில் பள்ளிகள் திறக்கப் படுவது இதுவே முதல் முறை.
ஷாங்காயில் நேற்று 338 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. மார்ச் மாதத்துக்குப் பின்னர் தொற்றுப் பரவல் பதிவான ஆகக் குறைவான தொற்று எண்ணிக்கை இதுவாகும். இரண்டு மாத பொதுமுடக்கத்துக்குப் பின்னர் ஷாங்காய் இப்போது கட்டுப்பாடு களைத் தளர்த்தி வருகிறது.
ஜூன் ஒன்றாம் தேதி அங்குள்ள கடைத்தொகுதிகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று அதிகாரி கள் முன்னதாகக் கூறி இருந்தனர்.
ஷாங்காய் நகர் திறக்கப்பட்டு வரும் வேளையில் பெய்ஜிங் நகரில் சமூக அளவில் தொற்றுப் பரவலைக் குறைப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு கொவிட்-19 தொடங்கியபோது ஏற்பட்ட பொருளியல் சிக்கலைவிட சீனப் பொருளியல் அதிக சிக்கலில் உள்ளது என்று அந்நாட்டுப் பிரதமர் லீ கெச்சியாங் நேற்று முன்தினம் கூறி இருந்தார்.
வேலையில்லா விகிதத்தைக் குறைப்பதற்குப் பணியாற்றும்படி அவர் அதிகாரிகளிடம் கூறினார்.
பல நகரங்களில் முடக்கநிலை நீடித்ததால் முடங்கிய சீனப் பொருளியல் இவ்வாண்டு எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டாது என்று கணிக்கப்படுகிறது.

