ஜகார்த்தா: வெற்றி போதாது, அடுத்தச் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் 15 கோல்கள் போட்டாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆசியக் கிண்ண ஹாக்கிப் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி 16 கோல்கள் போட்டு இந்தோனீசியாவைப் புரட்டி எடுத்தது.
ஆசிய கிண்ண ஹாக்கி போட்டி இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் உள்ள இந்திய அணி பாகிஸ்தானுடன் சமநிலை, ஜப்பானிடம் தோல்வி என ஒரு புள்ளி மட்டுமே பெற்றிருந்தது. இந்நிலையில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று இந்தோனீசியாவை எதிர்கொண்டது இந்தியா.
இந்த ஆட்டத்தில் மிக அதிகமான கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியான சூழலில் இந்திய அணி களமிறங்கியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் 6-0 என முன்னிலையில் இருந்த இந்திய அணி, அதற்கு பின்னர் சூறாவளியாய் சுழன்றடித்தது.
குறிப்பாக திப்சன் டிர்கி, அபாரன் சுதேவ் ஆகியோர் ஆட்டத்தை தலைகீழாக மாற்றினர். திப்சன் டிர்கி 4 கோல்கள் அடிக்க, சுதேவ் ஹாட்ரிக் கோல் அடிக்க, செல்வம், பவன், மூத்த வீரர் எஸ்.வி.சுனில் பிரேஸ் ஆளுக்கொரு கோல் போட்டு அசத்தினார்.
இதனால் இந்திய அணி இலக்கைவிட ஒரு கோல் அதிகமாக போட்டு இந்தோனீசியாவை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

