கியவ்: ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலைப் பலப்படுத்தும் வகையில் டென்மார்க்கின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளும் அமெரிக்காவின் தானியக்க ஹவிட்சர் ஏவுகணைகளும் உக்ரேனச் சென்றடைந்துள்ளன.
"பயிற்சி பெற்ற உக்ரேனிய குழுக்கள் ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்துவார்கள். அதே சமயம் உக்ரேனின் கடலோர தற்காப்பு ஹார்பூன் ஏவுகணைகளால் மட்டும் பலப்பட்டுவிடாது," என்று அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் ஓலெஸ்கி ரெஸ்னிகோவ் சொன்னார்.
ஹார்பூன் ஏவுகணைகள் கரையில் இருந்து கடலில் உள்ள கப்பலைத் தாக்கி அழிக்கக்கூடியது.
தெற்கு துறைமுகமான ஒடேசா கடலோர பகுதியைப் பாதுகாக்க உக்ரேனிய படையின் நெப்டியூன் ஏவுகணைகளுடன் ஹார்பூன் ஏவுகணைகள் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
ஒடேசா பகுதி ராணுவ நிர்வாக செய்தித் தொடர்பாளர் செர்ஹி, "பல ஹார்பூன் ஏவுகணைகள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை மொத்தத்தையும் வீழ்த்திவிட முடியும்," என்றார்.
இதற்கிடையே, உக்ரேனுக்கு தொடர்ந்து ஆயுத உதவி செய்வது ஆபத்தானது என்று பிரான்சையும் ஜெர்மனியையும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார். அது வட்டாரத்தின் நிலைத்தன்மையை குலைக்கக்கூடும் என்றார் புட்டின்.
இரு நாட்டுத் தலைவர்களுடனும் கிட்டத்தட்ட 80 நிமிடங்கள் புட்டின் தொலைபேசியில் உரையாடினார். மேலும் மேற்கத்திய நாடுகளின் தடைகளால் உலகளாவிய உணவு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் குறித்தும் அப்போது பேசப்பட்டதாக கிரெம்ளின் அதிபர் மாளிகை சொன்னது.
அதே சமயம், உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கியுடன் ரஷ்ய அதிபர் புட்டின் நேரடி, தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டுமென்று இருநாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தியதாக ஜெர்மானிய அதிபர் அலுவலகத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
உக்ரேனுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க தயாராக உள்ளதாக ரஷ்யா சொன்னாலும் ஸெலன்ஸ்கி, புட்டின் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு குறித்து எதுவும் கூறவில்லை.

