நேப்பாளத்தில் விபத்துக்குள்ளான விமான சிதைவுகளிலிருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேப்பாள விமானப் போக்குவரவு ஆணையம் தெரிவித்துள்ளது.
நேப்பாளத்தின் போக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை விமானம் புறப்பட்டது. அது புறப்பட்ட சிறிது நேரத்தில் அதற்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தளத்துக்கும் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இரவு முழுவதும் விமானத்தைத் தேடும் பணி நடந்தது. மோசமான வானிலை காரணமாக தேடும் பணி ஒத்திவைக்கப்பட்டு, அது மீண்டும் இன்று காலை தொடர்ந்தது.
சிதைவுகள் கண்டெடுக்கப்பட்ட பகுதியை அடைவதில் சிரமம் இருப்பதால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளான காரணம் இன்னும் தெரியவில்லை.
விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட, 22 பயணிகள் இருந்தனர்.
தாரா ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான மற்றொரு விமானம் 2016ல் விபத்துக்குள்ளானது. அந்த விமானமும் போக்காராவிலிருந்து ஜோம்சோமுக்குப் பறந்துகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. விமானத்தில் இருந்த 23 பேர் மாண்டனர்.

