ஜெனிவா: உலகளவில் ஒட்டுமொத்த பொதுச் சுகாதாரத்திற்கு குரங்கம்மை மிதமான அபாயம் விடுப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
குரங்கம்மை பொதுவாக கண்டறியப்படாத நாடுகளிலும் அண்மையில் அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் இவ்வாறு கூறியிருக்கிறது.
"மனிதர்களுக்கு இடையே பரவக்கூடிய ஆற்றலைக் கிருமி பெற்று, சிறுவயதினர், நோயெதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளோரைத் தொற்றினால், பொதுச் சுகாதார அபாயம் அதிகமாகக்கூடும்," என்று அது கூறியது.
இந்த மாதம் 26ஆம் தேதி நிலவரப்படி, குரங்கம்மை நிரந்தர நோயாக இல்லாத 23 நாடுகளில் 257 பேரிடம் அது கண்டறியப்பட்டது. 120 பேரை குரங்கம்மை தொற்றியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. குரங்கம்மையால் இதுவரை உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தகவல் எதுவும் இல்லை.
குரங்கம்மை நிரந்தர நோயாக இருக்கக்கூடிய நாடுகளிலும் அது இல்லாத நாடுகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள வேளையில், கூடுதலானோரிடம் அது கண்டறியப்படும் என்பதை தான் எதிர்பார்ப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது.
தொற்றுநோயான குரங்கம்மை பொதுவாக லேசான அறிகுறிகளைக் கொண்டது. மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் அது நிரந்தர நோயாக உள்ளது. குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு அது பரவுகிறது.
பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
"அண்மையில் குரங்கம்மை கண்டறியப்பட்டோர், அது நிரந்தர நோயாக இருக்கும் நாடுகளுக்குச் சென்று வந்ததாகத் தகவல் இல்லை," என்று சுகாதார நிறுவனம் சொன்னது.

