கொழும்பு: லசாந்தா தீப்தி என்ற 43 வயது மாது தமது அன்றாட வாழ்க்கையை பெட்ரோலுக்காக காத்திருக்கும் மக்கள் வரிசையை வைத்து திட்டமிடுகிறார்.
இலங்கைத் தலைநகர் கொழும்புவின் புறநகர்ப் பகுதியில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.
இதனால், இவர் எப்பொழுதுமே தமது ஆட்டோ ரிக்ஷாவின் பெட்ரோல் இருப்பில் ஒரு கண் வைத்திருப்பார். அதிலுள்ள இருப்பை வைத்தே இவர் அடுத்த சவாரியை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அமைகிறது.
பெட்ரோல் தீர்ந்துவிடும் நிலையில் உள்ளது என்று அதன் குறியீடு காட்டும்பொழுது அவர் உடனே பெட்ரோல் நிலையம் ஒன்றில் வசிசை பிடித்து நிற்பார்.
சில நேரங்களில், பெட்ரோல் நிரப்ப இரவு முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படிக் காத்திருந்து பெட்ரோல் நிரப்பினாலோ, அதற்காக எட்டு மாதங்களுக்கு முன் செலவழித்ததைவிட இரண்டரை பங்கு அதிகமாக செலவு செய்ய வேண்டியுள்ளது. இவரைப் போலவே, மில்லியன் கணக்கான மக்கள் இலங்கையில் திண்டாட வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கட்டுக்கடங்காமல் உயரும் விலைவாசி, குறையும் வருமானம், பெட்ரோலில் இருந்து மருந்துப் பொருள் வரை தட்டுப்பாடு என அந்நாடு சுதந்திரம் அடைந்தபின் இதுபோல் என்றுமே இல்லாத அளவுக்கு மோசமான பொருளியல் நெருக்கடியில் சிக்கி உழல்கிறது.
இலங்கையில் ரிக்ஷா ஓட்டுநர்களைக் காண்பது அரிது. ஆனால், ஐந்து நபர்கள் கொண்ட தமது குடும்பத்தைக் காப்பாற்ற இவர் ஏழு ஆண்டுகளாக ரிக்ஷாவையே நம்பியிருக்கிறார். இதில் இவருக்கு துணையாக இருப்பது 'பிக்மி' என்ற உள்ளூர் பயண செயலி. சவாரிகள் குறைந்து வருவது ஒருபுறம், பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு 30 விழுக்காடுவரை உயர்ந்து வருவது மறுபுறம் என்ற நிலையில் இவர் தமது ரிக்ஷாவுக்குப் போதுமான பெட்ரோலுக்காக அலைய வேண்டிய அவல நிலை உள்ளது.
இவர் முன்பெல்லாம் மாதம் இலங்கை ரூபாய் 50,000வரை வருமானம் ஈட்டுவார்.
ஆனால், கடந்த ஜனவரி மாதம் முதல் அது பாதிக்கும் கீழ் குறைந்து விட்டதாக இவர் கூறுகிறார்.

