வெலன்சியா காற்பந்துக் குழுவின் தலைவர் அனில் மூர்த்தி நீக்கம்
சிங்கப்பூர்: முன்னாள் அரசதந்திரியும் வெலன்சியா காற்பந்துக் குழுவின் தலைவருமான அனில் மூர்த்தி அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வெலன்சியா குழுவின் உரிமையாளரும் சிங்கப்பூர் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவருமான திரு பீட்டர் லிம்மை தரக்குறைவாக விமர்சித்த ஒலிநாடா ஒன்றை ஸ்பானிய நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டதைத் தொடர்ந்து அனில் மூர்த்திமீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
அந்த ஒலிநாடாவில் திரு பீட்டர் லிம் பற்றி தரக்குறைவாகப் பேசியதோடு அல்லாமல் வெலன்சியா காற்பந்துக் குழுவிலுள்ள பிரபலமான விளையாட்டாளர்கள் குழுவிலிருந்து வெளியேற முயற்சி செய்தால் அவர்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடப் போவதாகவும் அனில் மூர்த்தி மிரட்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இன்டர் மிலானிலிருந்து ஸ்பர்ஸ் செல்லும் இவான் பெரிசிச்
லண்டன்: இத்தாலியின் இன்டர் மிலான் காற்பந்துக் குழுவுக்கு இதுநாள்வரை விளையாடிய இவான் பெரிசிச் அடுத்த இரண்டாண்டுகளுக்கு இங்கிலாந்தின் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவுக்கு விளையாட உள்ளார்.
இதற்காக அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் பொருட்டு லண்டன் சென்றுள்ளதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.
குரோவேஷிய நாட்டு காற்பந்து வீரரான பெரிசிச், இன்டர் மிலான் குழுவில் தற்பொழுது ஸ்பர்ஸ் குழு நிர்வாகியாக உள்ள அண்டோனியோ கோன்டேயின் கீழ் விளையாடி 2020-2021 காற்பந்துப் பருவத்தில் இத்தாலிய சிரி ஆ கிண்ணத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காற்பந்துப் பருவத்தில் இன்டர் மிலான் குழுவிற்காக அவர் விளையாடிய 49 ஆட்டங்களில் 10 கோல்கள் போட்டு அந்தக் குழு கோப்பா இத்தாலிய கிண்ணத்தை வெல்ல உதவியுள்ளார்.
சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி: குழப்பத்தை விசாரிக்கும் யூவேஃபா
பாரிஸ்: சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் ரசிகர்களிடையே ஏற்பட்ட குழப்பம், அதைத் தொடர்ந்து போலிசார் மேற்கொண்ட நடவடிக்கையால் போட்டி தாமதமாகத் தொடங்கியது. ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு மைதானத்திற்குள் செல்ல முயன்றதால் பிரஞ்சு போலிசார் மிளகுத் தூள் கலந்த திரவியத்தை பீய்ச்சி அடித்தனர். இதுபற்றிக் கூறிய அதிகாரி ஒருவர் டிக்கெட் விற்பனையில் பெரிய அளவில் மோசடி நிகழ்ந்துள்ளதாகக் கூறினார்.
தற்பொழுது இது குறித்து விசாரிக்க முற்பட்டுள்ளது யூவேஃபா என்ற ஐரோப்பிய காற்பந்து சங்கம்.

