ஜகார்த்தா: பாலி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மீண்டும் பயணிகளை ஈர்க்க இந்தோனீசியா, சிறப்பு ஐந்தாண்டு விசாவை வழங்கத் திட்டமிட்டுள்ளது. அந்த விசா, வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களுக்காவும் வர்த்தகம் சார்ந்த பயணம் மேற்கொள்வோருக்காவும் உருவாக்கப்படுகிறது.
அத்தகையோர் சிலரைக் கொண்டு கருத்தாய்வு நடத்தப்பட்டது. அவர்களில் 95 விழுக்காட்டினர் இந்தோனீசியாவில் இருந்தபடி வீட்டிலிருந்து வேலை பார்ப்பதையே அதிகம் விரும்புவதாகவும் அதையொட்டி பயணம் மேற்கொள்ளத் தயாராய் இருப்பதாகவும் அந்நாட்டின் சுற்றுப்பயண அமைச்சர் சாண்டியாகோ உனோ கூறினார்.
புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் தொலைக்காட்சி ஒளிவழிக்கு அளித்த பேட்டியில் அவர் இதைத் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு தொடக்கத்திலிருந்தே இந்த சிறப்பு விசாவை வழங்குவது குறித்து இந்தோனீசியா ஆலோசித்து வந்தது. ஆனால் கொவிட்-19 கிருமிப் பரவல் அலை அவ்வப்போது தலைதூக்கியதால் அதற்கான முயற்சியில் இடையூறுகள் ஏற்பட்டன. இந்தோனீசியாவின் பிரபல சுற்றுலா தலங்களுக்குப் போதுமான விமானச் சேவைகள் இல்லாததும் ஒரு காரணம்.
தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய பொருளியலைக் கொண்ட நாடான இந்தோனீசியா, கொவிட்-19 தொடர்பிலான பெரும்பாலான பயணக் கட்டுப்பாடுகளை விலக்கிவிட்டது. அதன்படி முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அந்நாட்டுக்குச் செல்ல பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை, தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும் வேண்டாம்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தோனீசியாவுக்குப் பயணம் மேற்கொண்டோரின் எண்ணிக்கை 500 விழுக்காடு கூடியது.