இந்தோனீசியாவில் டிக்டாக் சவால் ஒன்று விபரீதத்தில் முடிந்தது. சவாலை மேற்கொண்ட ஒரு 18 வயது இளையர் உயிரிழந்தார். 'மரண தேவதை' என்று அழைக்கப்படும் சவாலை மேற்கொள்பவர்கள் ஒரு நகரும் கனரக வாகனத்தின் முன் குதிக்கவேண்டும்.
இந்தச் சவாலை மேற்கொண்ட மூன்று இளையர்களில் ஒருவரை வாகனம் மோதியது. நகரும் வாகனம் வரும் தடத்திலிருந்து அவர் விலக ஒரு நொடி தாமதமானதால் விபத்து ஏற்பட்டது.
இளையர் சம்பவயிடத்திலே உயிரிழந்ததாக இந்தோனீசிய ஊடகங்கள் தெரிவித்தன. வாகனத்தின் ஓட்டுநர் காவல் துறையால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் இதுபோன்று குறைந்தது இரண்டு சம்பவங்கள் நடந்திருப்பதாகக் கூறப்பட்டது. ஒரு சம்பவத்தில் 14 வயது சிறுவனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவனுடைய மண்டை ஓடு முறிந்ததோடு, பற்களும் சிதறின.
இந்த விபரீத விளையாட்டில் பல இளையர்கள் கண்மூடித்தனமாக ஈடுபட்டுவருகின்றனர், அவர்கள் சவாலைச் செய்யும் காணொளிகளை டிக்டாக் சமூகத் தளத்தில் பகிர்ந்துகொண்டும் வருகின்றனர்.

