சிங்கப்பூர்: அணுவாயுதம் வைத்திருக்கும் அண்டை நாடுகள் அனைத்துலக விதிமுறைகளைப் புறக்கணிப்பதாக ஷங்ரிலா கலந்துரையாடலில் பங்கேற்று பேசிய ஜப்பானிய தற்காப்பு அமைச்சர் நோபுவோ கிஷி அதிருப்தி தெரிவித்தார்.
இதன் காரணமாக ஜப்பானுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றார் அவர்.
"ஜப்பானைச் சுற்றி உள்ள சில நாடுகள் அணுவாயுதங்களை வைத்துள்ளன. சில நாடுகள் அணுவாயுதங்களைத் தயாரித்து வருகின்றன. இந்த நாடுகள் அனைத்துலக விதிமுறைகளை பகிரங்கமாக மீறுகின்றன," என்று திரு கிஷி சாடினார்.
கடந்த மாதம் ஜப்பானுக்கும் தைவானுக்கும் மிக அருகில் உள்ள கடற்பகுதியில் சீனாவும் ரஷ்யாவும் இணைந்து வான்வழிச் சுற்றுக்காவலில் ஈடுபட்டன.
உக்ரேன் மீது படையெடுத்த பிறகு ரஷ்யா இத்தகைய கூட்டு சுற்றுக்காவலில் ஈடுபட்டது அதுவே முதல்முறை.
"சீனாவும் ரஷ்யாவும் ராணுவ பலம் கொண்ட நாடுகள். அவை இணைந்து ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அண்டை நாடுகளிடையே பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்படுவது இயல்பு.
இன்று உக்ரேன் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது. நாளை கிழக்கு ஆசியாவில் போர் வெடிக்கக்கூடும்," என அவர் கவலை தெரிவித்தார்.
தைவானின் பாதுகாப்பு, நிலைத்தன்மை ஜப்பானுக்கு மட்டுமல்லாது உலக நாடுகளுக்கும் மிக முக்கியமானது என்று திரு கிஷி வலியுறுத்தினார்.
தற்போது நிலவும் அமைதி நிலையை சீனா சீர்குலைக்கக்கூடும் என்று அவர் கவலை தெரிவித்தார்.
தமது உரையின்போது வட
கொரியாவையும் திரு கிஷி கடுமையாக விமர்சித்தார்.
இவ்வாண்டில் மட்டும் வட
கொரியா குறைந்தது 18 ஏவுகணைச் சோதனைகளை நடத்தியுள்ளதை அவர் சுட்டினார்.
ஜப்பானையும், கிழக்கு ஆசியாவையும் உலக நாடுகளையும் மிரட்ட வடகொரியாவுக்கு வாய்ப்பு தரக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மூன்று நாள்களுக்கு நடைபெறும் ஷங்ரிலா கலந்துரையாடல் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் உலகெங்கும் உள்ள உயர் ராணுவ அதிகாரிகள், அரசதந்திரிகள், ஆயுதம் உற்பத்தியாளர்கள் முதலியோர் கலந்துகொண்டுள்ளனர்.

