அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையைத் தடுக்க அந்நாட்டு அரசாங்கம் உடனடியாக சட்டங்கள் கொண்டுவர கோரி நாடு முழுவதும் பேரணிகள் இடம்பெற்றன.
தலைநகர் வாஷிங்டனில் கிட்டத்தட்ட 40,000 பேர் கூடினர். 'நம் உயிருக்காக அணிவகுப்போம்' எனும் அமைப்பு இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 2018ல் ஃபுளோரிடாவில் ஓர் உயர்நிலை பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிர்பிழைத்த மாணவர்களால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
நியூயார்க், லாஸ் ஏஞ்சலிஸ், சிக்காகோ போன்ற நகரங்களில் 450க்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் அப்பாவி மக்கள் பலியாகி வருவதாக அமைப்பு குற்றஞ்சாட்டியது.
சில வகை துப்பாக்கிகளுக்குத் தடை விதிப்பது, துப்பாக்கி வாங்குபவர்களைச் சோதனைக்கு உட்படுத்துவது, துப்பாக்கி வைத்திருப்பவர்களின் தகவல்களைச் சேகரிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும் என்று அமைப்பு வலியுறுத்திவருகிறது.
பேரணிக்குத் தம்முடைய ஆதரவைத் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துப்பாக்கிகளுக்கு எதிராக சட்டங்களைக் கொண்டுவருமாறு நாடாளுமன்றத்தை அண்மையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் அண்மை காலத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரி வருகின்றனர்.