பாரிஸ்: ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே நடந்து வரும் போர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று ரஷ்யாவின் முன்னாள் பிரதமரும் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவருமான காஸ்யானோவ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை ரஷ்யாவின் பிரதமராகப் பதவி வகித்த திரு காஸ்யானோவ், நேற்று ஏஎஃப்பி செய்தியாளர்களுக்கு காணொளி வாயிலாக அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். இரண்டு ஆண்டுகள் தொடரும் இந்தப் போருக்குப் பின் ரஷ்யா மக்களாட்சிக்கு மாறும் சூழல் உருவாகக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
"பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரேன் மீது தொடங்கிய படையெடுப்புக்கு முன்னர், ரஷ்ய பாதுகாப்பு மன்றத்தின் கூட்டம் நடந்தது. அப்போதே போர் மூளப்போகிறது என்பதை உணர்ந்தேன்," என்று கூறினார் திரு காஸ்யானோவ்.
போரின் பின்விளைவுகள் பற்றி திரு புட்டின் எண்ணிப்பார்க்காமல்தான் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்றும் திரு காஸ்யானோவ் கூறினார்.
திரு காஸ்யானோவ், அதிபர் புட்டினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் ரஷ்யாவின் எதிர்க்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இப்போது அவர், ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சியான சுதந்திரக்கட்சிக்குத் தலைமை வகித்து வருகிறார். இந்தப் போரில் உக்ரேன் வீழ்ச்சியடைந்தால், ரஷ்யாவின் அடுத்த இலக்கு பால்டிக் பகுதிகளாக இருக்கும் என்றும் அவர் கூறினார். ஆனால், போர் இரண்டு ஆண்டுகளுக்கு இழுபறியாக இருக்கும் என்று கூறிய திரு காஸ்யானோவ், இறுதியில் உக்ரேன் வெற்றி பெறுவது தவிர்க்கமுடியாதது என்று கூறியுள்ளார். போருக்குப் பின்னர், ரஷ்யா ஒரு மக்களாட்சியைக் கொண்ட நாடாக உருவாகும் என்பது மட்டும் உறுதி என்று திரு காஸ்யானோவ் கூறினார்.

