சோல்: கனரக வாகன ஓட்டுநர்கள் நாடளாவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், சரக்குக் கொள்கலன்களை துறைமுகங்களுக்கு ஏற்றிச் செல்ல வாகனங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தென்கொரியாவின் துறைமுகங்களில் ஏராளமான சரக்குக் கப்பல்கள், சரக்குக் கொள்கலன்களுக்காக காத்துக்கிடக்கின்றன.
இந்தப் பிரச்சினையை சரிக்கட்ட, அந்நாட்டு ராணுவம் தனது கனரக வாகனங்களை அனுப்பிவைத்துள்ளது.
ஜூன் 7ஆம் தேதி கனரக வாகன ஓட்டுநர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர்.
போராட்டம் தொடங்கி இன்றுடன் எட்டு நாள்களாகிறது. இந்தப் போராட்டத்தால் நாட்டில் இரும்பு, மோட்டார் வாகனத் தொழிற்சாலைகள், தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய முடியாமல் முடங்கிக்கிடக்கின்றன.
அதனால் அந்த தொழிற்சாலைகள் தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளைக் குறைத்துக்கொண்டுள்ளன.
கனரக வாகன ஓட்டுநர் சங்கத்தின் 22,000 பேர், ஓட்டுநர்களுக்கு நிலையான அடிப்படைச் சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்பது குறித்து அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அவர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தால் அங்குள்ள பெரும்பாலான வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

