நியூயார்க்: உக்ரேனின் சியவெரோடொனெஸ் நகருடன் அருகே உள்ள நகரை இணைக்கும் ஒரு பாலத்தை ரஷ்யப் படையினர் குண்டு வீசித் தகர்த்துவிட்டனர். அதனையடுத்து அந்நகரில் உள்ள உக்ரேனியப் படைகளை விரைவில் ரஷ்யப் படைகள் முற்றுகையிடும் என்று கூறப்படுகிறது.
மக்களைப் போரில் இருந்து பாதுகாக்க அந்தப் பாலம் முக்கிய பாதையாக இருந்தது. இப்போது அதுவும் தகர்க்கப்பட்டு விட்டதாகவும் போரில் இருந்து மக்களைப் பாதுகாப்பது கேள்விக்குறியாகி விட்டது என்று உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியில் தொடர்ந்து கடுமையான சண்டை நடந்து வருவதாக உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி ஒரு காணொளியில் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ராணுவம் டொன்பாஸ் பகுதிக்கு ராணுவத்தை அனுப்ப முயன்று வருவதாக அவர் கூறினார்.
உக்ரேனின் ஒவ்வொரு தெருவிலும் ரஷ்யப் படையினருடன் உக்ரேனியர்கள் போராடி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
நகரத்தின் பெரும்பாலான பகுதிகளை ரஷ்யப் படைகள் கைப்பற்றி விட்டன. ஆனால் உக்ரேனின் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகள் மட்டும் உக்ரேன் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
அப்பகுதிகளில்தான் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

