கொழும்பு: நாடு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் அரசுப் பணியில் இருப்போர் ஒவ்வொரு வாரமும் கூடுதலாக ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு பயிர் வளர்ப்பில் ஈடுபட வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு ஊழியர்கள் அவரவர் வீட்டுப் பின்புறத்தில் பயிர்களை வளர்க்கலாம் என்று இலங்கை அமைச்சரவை அறிக்கை கூறியது.
இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது. எரிபொருள், மருந்துகள் உள்ளிட்டவற்றின் விலை உயர்வும் மக்களை அவதிக்குள்ளாக்கியிருக்கிறது.
இவ்வேளையில் கூடுதலாக ஒரு நாள் விடுப்பு அளிப்பதால் ஊழியர்களின் போக்குவரத்துச் செலவும் மிச்சப்படும்; எரிபொருள் தேவையும் குறையும் என்று கூறப்பட்டது.
எனவே அடுத்த மூன்று மாதங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும். அத்தியாவசியச் சேவைப் பணியாளர்களுக்கு இது பொருந்தாது.
வெளிநாடு சென்று வேலைசெய்ய விரும்பும் அரசு ஊழியர்களுக்கு ஐந்தாண்டு ஊதியமில்லா விடுப்பு வழங்கப்படும்; அவர்களின் ஓய்வூதியம் பாதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் 1.5 மில்லியன் பேர் அரசுப் பணிகளில் உள்ளனர்.

