லாஸ் ஏஞ்சலிஸ்: கணவரைக் கொல்வது எப்படி எனும் தலைப்பில் கட்டுரை எழுதிய அமெரிக்கப் பெண் எழுத்தாளருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
71 வயது நான்சி கிரேம்ப்டன் புரோஃபி அவரது கணவரைச் சுட்டுக்கொன்றதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பிறகே அவர் பிணையில் செல்ல விண்ணப்பிக்கலாம்.
சமையற்கலை வல்லுநரான கணவர் டேனியல் புரோஃபி அவர் வேலைபார்த்த சமையற்கலைக் கல்லூரி வகுப்பறையில் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொலையுண்டு காணப்பட்டார். மனைவி நான்சி அந்த நேரத்தில் அந்த வட்டாரத்தில் காரை ஓட்டிச்சென்றது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருக்கிறது. இருப்பினும் அவர் கணவரைக் கொலை செய்யப் பயன்படுத்திய துப்பாக்கியைக் காணவில்லை.
கணவரது ஆயுள் காப்பீட்டுத் தொகையாகப் பல்லாயிரம் டாலரைப் பெறும் நோக்கில் நான்சி இந்தக் கொலையைச் செய்ததாகக் கருதப்படுகிறது. கணவனை எப்படிக் கொல்லலாம், அதற்கான காரணங்கள் என்னென்ன என்று கூறும் அவரது வலைப்பதிவு இணையத்தில் இன்னும் உள்ளது.

