இலங்கையில் அரசாங்க ஊழியர்களுக்கு வாரத்தில் மேலும் ஒரு நாள் ஓய்வு அளிக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் இருக்கிறது. இதனால் ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களைத் தாங்களே வளர்க்க கூடுதல் ஒரு நாள் ஓய்வைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அடுத்த மூன்று மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் ஊழியர்களுக்கு ஓய்வு கிடைக்கும். தங்கள் குடும்பத்துக்குத் தேவையான பழம், காய்கறிகள் போன்றவற்றை ஊழியர்கள் வளர்க்க அரசாங்கம் ஊக்குவிக்கிறது. உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டால், அவர்கள் சாப்பிட போதிய உணவு இருப்பதை இது உறுதிசெய்யும் என அரசாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் அரசாங்கத் துறையில் வேலை பார்க்கின்றனர். 70 ஆண்டுகளில் இல்லாத ஆக மோசமான பொருளியல் நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது இலங்கை. உணவு, மருந்து, எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசாங்கத்தால் இயலவில்லை. அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்பட்டிருப்பது இதற்கு காரணம்.
இலங்கை அரசாங்க ஊழியர்களுக்கு கூடுதல் ஒரு நாள் ஓய்வு
1 mins read
பொருளியல் நெருக்கடியால் இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் உள்ளது (படம்: ராய்ட்டர்ஸ்) -

