லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், எல் மாண்டே நகரில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரு காவல் அதிகாரிகளும் சந்தேக ஆடவர் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கத்திக்குத்துச் சம்பவம் ஒன்றின் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோது அவர்கள் சுடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின்போது சுடப்பட்ட அந்த அதிகாரிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. அவர்களில் ஒருவர், எல் மாண்டே காவல்துறையைச் சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் காவல்துறையில் சேர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகப்போகிறது என்றும் உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.
அடையாளம் கண்டறியப்படாத ஆடவர் ஒருவர், இந்தத் துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டதாக லாஸ் ஏஞ்சலிஸ் காவல்துறை தெரிவித்தது.
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைச் சம்பவங்கள் அண்மையில் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
டெக்சஸ் மாநிலத்தின் உவால்ட நகரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் கடந்த மாதம் அரங்கேறிய துப்பாக்கிச்சூட்டில் 19 மாணவர்களும் இரு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.
நியூயார்க் மாநிலத்தின் பஃப்ளோ நகரில் உள்ள பேரங்காடி ஒன்றில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரத்தை முடக்கும் விதமாக கடுமையான சட்டங்களைக் கொண்டுவர தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.