ஜெனிவா: தற்போதைய குரங்கம்மை தொற்றை, அனைத்துலக கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசரநிலையாக கருத வேண்டுமா என்பதை மதிப்பீடு செய்ய, உலக சுகாதார நிறுவனம் அவசரநிலைக் கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது.
குரங்கம்மை நிரந்தர நோயாக இல்லாத நாடுகளில் அதன் பரவல் குறித்து கலந்தாலோசிக்க சிறப்புக் குழு ஒன்று அடுத்த வாரம் கூடுகிறது என்று ஐரோப்பாவுக்கான சுகாதார நிறுவனத்தின் வட்டார இயக்குநர் டாக்டர் ஹான்ஸ் குளூஜ் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அனைத்துலக கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசரநிலையானது, உலக சுகாதார நிறுவனத்தின் ஆக அதிக எச்சரிக்கை நிலையாகும். அத்தகைய நிலை அறிவிக்கப்பட்டால், தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒத்துழைக்க உலக நாடுகள் ஊக்குவிக்கப்படும். அத்தகைய சூழலில், பயண ஆலோசனை உள்ளிட்ட பரிந்துரைகளை சுகாதார நிறுவனம் வெளியிடும்.
பல்லாண்டு காலமாக ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட வளரும் நாடுகளில் நிரந்தர நோயாகக் கண்டறியப்பட்டு வந்துள்ள குரங்கம்மை தொற்று, தற்போது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தலைகாட்டி வருகிறது.