லண்டன்: பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டு வழக்கில் இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவருக்கு லண்டன் நீதிமன்றம், புதன்கிழமையன்று நான்கு ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. மனேஷ் கில் என்ற 39 வயது ஆடவர், ஆண்-பெண் தோழமை உறவு தேடும் இணையத் தளம் வாயிலாக நட்புகொண்ட பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கை ஸ்காட்லாந்து நீதிமன்றம் கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரித்து கடைசியில் ஒரு பெண்ணுக்கு எதிராக நடத்தப்பட்ட கடுமையான பாலியல் வன்கொடுமை குற்றத்தை மனேஷ் புரிந்துள்ளதாகத் தீர்ப்பளித்தது.
அதன் அடிப்படையில் அவருக்கு நான்கு ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மனேஷ், பிரிட்டனில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். ஆண், பெண் உறவுதேடும் இணையத்தளம் ஒன்றில், 'மைக்' என்ற பெயரில் வலம் வந்தார். அப்போது நட்பான ஒரு பெண்ணை ஸ்டெர்லிங் நகரில் உள்ள ஒரு விடுதியில் சந்தித்தார். அங்கு, அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது. பாலியல் குற்றத்திற்காக ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தண்டனை, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஓர் எச்சரிக்கையாக அமையும் என்று காவல்துறை அதிகாரி வில்சன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனக்கு நடந்த கொடுமையைத் துணிச்சலுடன் வந்து காவல்துறையிடம் பகிர்ந்துகொண்டது பாராட்டத்தக்கது என்றார் அந்த அதிகாரி.

