உக்ரேனுக்கு அதிநவீன ஆயுதங்கள் அனுப்ப முடிவு

உக்ரேனுக்கு அதிநவீன ஆயுதங்கள் அனுப்ப முடிவு

2 mins read
7956a4b3-f033-4f87-8c5d-78361ce2be4e
-

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு

பிர­சல்ஸ்: ரஷ்­யா­வின் தாக்­கு­த­லைச் சமா­ளிக்க முடி­யா­மல் திணறி வரும் உக்­ரே­னுக்கு US$1.4 பில்­லி­யன் மதிப்­புள்ள நவீன ஆயு­தங்­களை வழங்கி உதவ அமெ­ரிக்­கா­வும் உக்­ரே­னின் நட்பு நாடு­களும் முன்­வந்­துள்­ளன.

பிர­சல்­ஸில் உள்ள நேட்டோ தலை­மை­ய­கத்­தில் அமெ­ரிக்­கா­வின் தற்­காப்பு அமைச்­சர் லாய்ட் ஆஸ்­டின், நட்பு ­நா­டு­க­ளின் தலை­வர்­க­ளைச் சந்­தித்­துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார். அந்­தப் பேச்சுவார்த்தைக்குப் பின், உக்­ரே­னுக்கு நெடுந்­தொலைவு ஏவு­கணை, கப்­ப­லில் இருந்து பாயும் ஏவு­கணை உள்­ளிட்ட நவீன ஆயு­தங்­களை விநி­யோ­கம் செய்ய முடி­வு­செய்­துள்­ள­தாக ஆஸ்­டின் அறி­வித்­துள்­ளார்.

கடந்த பிப்­ர­வரி 24ஆம் தேதி உக்­ரே­னில் படை­யெ­டுத்­த­தில் இருந்து அமெ­ரிக்கா, இது­வரை US$5.6 பில்­லி­யன் மதிப்­புள்ள தற்­காப்பு உத­வி­களை உக்­ரே­னுக்கு செய்ய கடப்­பாடு கொண்­டுள்­ளது.

உக்­ரேன் அதி­பர் வெலோ­டி­மின் ஸெலென்ஸ்­கி­யி­டம் புதன்­கி­ழமை நடந்த 40 நிமி­டச் சந்­திப்­பின்­போது நவீன ஆயு­தங்­கள் குறித்து தாம் தெரி­வித்­த­தாக அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் ஓர் அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார். முன்­ன­தாக ஸெலென்ஸ்கி, ரஷ்­யா­வின் முரட்டுத் தாக்­கு­த­லைச் சமா­ளிக்க எங்­க­ளுக்கு அதி­க­ள­வில் அதி­நவீன ஆயு­தங்­கள் தேவைப்­ப­டு­வ­தாக அமெ­ரிக்­கா­வி­ட­மும் மேற்­கத்­திய நாடு­க­ளி­ட­மும் கோரிக்கை விடுத்­தி­ருந்­தார்.

ஆனால், மேற்­கத்­திய நாடு­களின் ஆயுத நிபு­ணர்­களோ, போர் நடந்­து­கொண்­டி­ருக்­கும்போது நவீன ஆயு­தங்­களை அங்கு விநி­யோ­கிப்­பது என்­பது கடி­ன­மான பணி என்று கூறியுள்ளனர்.

நிச்­ச­யம் நாம் எதிர்­பார்க்­கும் வேகத்­தில் அதைச் செய்ய முடி­யாது என்று கூறி­யுள்­ள­னர். ஏனெ­னில் அதி­வே­கத்­தில் உற்­பத்தி செய்து அதை விநி­யோ­கம் செய்­தா­லும் அதை இயக்­கு­வ­தற்­கான பயிற்­சி­யும் அளிக்க வேண்­டும். அத்­து­டன் நவீன ஆயு­தக் கிடங்­கு­களை எதி­ரா­ளி­யின் தாக்­கு­தல் இலக்­கில் இருந்து பாது­காக்­க­வேண்­டும் என்­றும் கூறி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் பெரிய நாடு­க­ளான ஜெர்­மனி, பிரான்ஸ், இத்­தாலி ஆகிய நாடு­க­ளின் தலை­வர்­கள் நேற்று முதன்­மு­த­லாக உக்­ரே­னுக்கு ரயில் மூலம் பய­ணம் மேற்­கொண்­ட­னர்.

ஒற்­று­மை­யைப் பறை­சாற்­றும் வகை­யில் அவர்­கள் இந்­தப் பய­ணத்தை மேற்­கொண்­ட­தா­கத் தெரி­வித்­த­னர்.

ஜெர்­மானிய பிர­த­மர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், பிரான்ஸ் அதி­பர் இமா­னு­வல் மெக்­ரோன், இத்­தா­லி­யப் பிர­த­மர் மரியோ டிராகி ஆகி­யோர் உக்­ரே­னில் போரை முடி­வுக்­குக் கொண்­டு­வர ரஷ்­யா­வு­டன் அமை­திப்­பேச்­சுக்கு விருப்­பம் தெரி­வித்­துள்­ள­னர்.

ரஷ்­யா­வு­ட­னான அமை­திப் பேச்சு­வார்த்­தை­கள் மூலம் போரை இன்­னும் விரை­வாக முடிப்­ப­தற்­கான விருப்­பத்தை அவர்கள் வெளிப்­படுத்­தி­யுள்­ள­னர்.

ஸெலென்ஸ்­கி­யின் ராணுவ ஆலோ­ச­க­ரான திரு மைகாய்லோ போடோ­லி­யாக் என்­ப­வர், ரஷ்­யா­வின் அதி­ர­டித் தாக்­கு­த­லைச் சமா­ளிக்க ரஷ்­யா­வுக்கு 1,000 பீரங்கிகளும், 300 பல­த­ரப்­பட்ட ஏவு­க­ணை­க­ளைப் பாய்ச்­சும் ஆயு­தத்­து­டன் 500 டாங்­கி­கள் உள்­ளிட்ட நவீன ஆயு­தங்­கள் அவ­ச­ர­மா­கத் தேவைப்­ப­டு­கிறது என்று வலியுறுத்தியுள்ளார்.

அமெ­ரிக்க தற்காப்பு அமைச்­சர் ஆஸ்­டி­னும் நேட்­டோ­வும் உக்­ரே­னின் அவ­ச­ரத் தேவை­யைப் புரிந்­து­கொள்ள வேண்­டும் என்று நட்பு நாடு­க­ளுக்கு வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், போர் நடந்­து­வரும் உக்­ரே­னின் கிழக்­குப் பகு­தி­யில் இரண்டு அமெ­ரிக்­கர்­களை ஒரு வார­மா­கக் காண­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது.

அந்த அமெ­ரிக்­கர்­கள், உக்­ரே­னுக்கு ஆத­ர­வா­கப் போரில் ஈடு­பட்­ட­னர். எனவே போரின்போது ரஷ்­யப் படை­யி­ன­ரால் அவர்­கள் போர்க்­கை­தி­க­ளாக கைது செய்­யப்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.