சிங்கப்பூருக்கு புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்துக்கும் இடையே திங்கள்கிழமை (ஜூன் 13) விபத்து தவிர்க்கப்பட்டது.துருக்கி வான்வெளியில் இரண்டு விமானங்களும் பறந்துகொண்டிருந்தபோது, விபத்து நேர இருந்தது. யுஎல்-504 விமானம், கொழும்பிலிருந்து லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்தது. மற்றொரு விமானம் லண்டனிலிருந்து துபாய் வழியாக சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்தது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தைவிட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் வேகமாக பறந்துகொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் பறக்கும் உயரத்தைக் குறைத்துக்கொள்ளும்படி அங்காரா வான்வெளி கட்டுப்பாடு நிலையம் கேட்டுகொண்டது. அவ்வாறு செய்திருந்தால் பிரிட்டிஷ் விமானத்தின் பாதையின் எதிர்திசையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்திருக்கும்.
அதிகாரிகளின் கட்டளைக்கு உடனடியாக இணங்காமல், எதிர்வரும் விமானம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகள். சில நிமிடங்கள் கழித்து மற்றொரு விமானம் அதே பகுதியில் பறப்பதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானிகள் விழிப்புடன் இருந்ததால் நடுவானில் விபத்து தவிர்க்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது. இந்தச் சம்பவம் குறித்து நிறுவனம் புகார் அளித்துள்ளது.

