உஸ்பேகிஸ்தானில் திருமண நாளன்று மணப்பெண்னை அடித்த மாப்பிள்ளை மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பதிவுசெய்யப்பட்ட காணொளி இணையத்தில் பரவலாக பகிர்ந்துகொள்ளப்பட்டு, பல அனைத்துலக ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வெளியானது.
உஸ்பேகிஸ்தானில் திருமண சாங்கியங்கள் முடிந்தபிறகு, புதுமணத் தம்பதிகள் விளையாட்டுகளில் ஈடுபடுவது வழக்கம். அப்படி ஒரு விளையாட்டில் தம்பதி ஒரு மிட்டாயை உரிக்கவேண்டும். இந்த விளையாட்டில் மனைவி வெற்றிபெற்றார். மாப்பிள்ளைக்கு வந்தது மூக்குக்கு மேல் கோபம். பெண்ணின் தலையில் ஓங்கி ஒரு அடி விட்டார்.
இந்தச் சம்பவத்தின் தொடர்பில் போக்கிரித்தனமாக நடந்துகொண்டதாக மாப்பிள்ளை மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
தம்பதியிடம் பேசிய காவல் துறையினர், மாப்பிள்ளை பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுகொண்டதாகவும், மனைவி அவரை மன்னித்து விட்டதாகவும் கூறினர். இருப்பினும் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 15 நாள்கள் தடுப்புக் காவல் அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்துரைத்த அந்நாட்டு அதிபரின் மகள், இதுபோன்ற சம்பவங்களை மூடிமறைக்கக்கூடாது என்றார். பெண்கள்
சுதந்திரமாகவும் துணிச்சலாகவும் இருக்க கல்வி மிக முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.

