இலங்கையில் எரிபொருள் தீர்ந்ததால் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த முயற்சி
கொழும்பு: இலங்கையில் எரிபொருள் தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டு உள்ளதால் பொருளியல் நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
ஏற்கெனவே கட்டணப் பாக்கி இருப்பதன் காரணமாக எரிபொருள் வரத்து தடைபட்டுள்ளதால் அரசாங்கத்துக்குச் சொந்தமான சிலோன் பெட்ரோலிய கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு எரிபொருள் கிடைக்கவில்லை என மின்சார, எரிசக்தித் துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர நேற்று முன்தினம் கூறி இருந்தார்.
இதைத் தொடர்ந்து, வீதிகளில் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு அலுவலகங்களுக்கும் பள்ளிகளுக்கும் நேற்று பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தலைநகர் கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
இதற்கிடையே, பெட்ரோல் நிலையங்களுக்கு எரிபொருள் வந்துசேர்வதை எதிர்பார்த்து அவற்றுக்கு வெளியே பல கிலோமீட்டர் தூரத்திற்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வரிசை பிடித்து காத்து இருந்தன.
எரிபொருள் விநியோகத்திற்காக ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிடம் இலங்கை அரசு உதவி கோரியுள்ளது. எரிபொருள் இறக்குமதிக்காக புதிதாக $500 மில்லியன் கடனுதவியைப் பெற இந்தியாவின் ஒப்புதலுக்காக இலங்கை காத்திருப்பதாக திரு விஜேசேகர தெரிவித்தார்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு தாக்குப்பிடிக்க, அனைத்துலக பண நிதியத்திடம் இருந்தும் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்தும் இலங்கைக்கு ஏறத்தாழ $6 பில்லியன் நிதியுதவி தேவைப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியிருந்தார்.
இந்நிலையில், பட்டினியால் வாடும் நிலைமை ஏற்படுவது குறித்து இலங்கை மக்கள் அஞ்சுகின்றனர். மாவு, பால் மாவு போன்ற உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் ஏறக்குறைய 60 விழுக்காட்டை எட்டியுள்ளது. கடந்த அறுவடைப் பருவத்தில் அரிசி உற்பத்தி 40 முதல் 50 விழுக்காடு வரை சரிந்தது. தற்போது விதை, உரத்திற்கான தட்டுப்பாட்டால் பயிர் உற்பத்தி 50 விழுக்காடு வரை குறையலாம் என வேளாண் துறை அமைச்சர் மகிந்த அமரவீர கூறினார்.

