நாட்டிற்குள் எண்மர் சட்டவிரோதமாக நுழைந்ததை அடுத்து இந்த நடவடிக்கை
ஜோகூர் பாரு: மலேசியாவுக்குள் எட்டுப் பேர் சட்டவிரோதமாக நுழைவதைக் காட்டும் காணொளிக் காட்சி சிசிடிவி கண்காணிப்புக் கருவில் பதிவானதைத் தொடர்ந்து, ஜோகூர் நீரிணையின் ஒரு பகுதியில் மலேசிய காவல்துறையினர் முள்வேலிகளை அமைத்துள்ளனர்.
மலேசியாவுக்குள் சிலர் சட்டவிரோதமாக நுழைந்தது குறித்து நேற்று அதிகாலை 1.12 மணிக்கு காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாக ஜோகூர் பாரு தெற்கு காவல்துறை தலைவர் ராவுப் சலாமாட் தெரிவித்தார்.
ஆடவர்கள் ஐவரும் மாதர்கள் மூவரும் சட்டவிரோதமாக நுழைந்ததைக் கண்காணிப்புக் கருவியில் பதிவான காணொளிப் பதிவு காட்டியதாக அவர் சொன்னார்.
நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதற்கான ஆரம்பகட்ட வழிமுறைகளில் முள்வேலிகளை அமைப்பதும் அடங்கும் என ஜோகூர் முதல்வர் ஒன் ஹாஃபிஸ் கஸாலி தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அந்தப் பகுதியில் எல்லா நேரமும் காவல்துறை அதிகாரிகள் சுற்றுக்காவல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.