ஷேமஷில், போலந்து: உக்ரேன் மீது ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரேனுக்கு முதன்முறையாக சென்ற பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மெக்ரோன், ஜெர்மானியப் பிரதமர் ஓலஃப் ஷோல்ஸ், இத்தாலியப் பிரதமர் மாரியோ டிராகி ஆகியோர் நேற்று ரயிலில் போலந்து திரும்பினர்.
போலந்தின் ஷேமஷில் நகருக்கு ரயில் வந்து சேர்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர், பிரெஞ்சு அதிபர் மெக்ரோனை இத்தாலியப் பிரதமர் டிராகி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
உக்ரேனியத் தலைநகர் கியவ்வில் இருந்து புறப்பட்ட பிறகு அதிபர் மெக்ரோனும் ஜெர்மானியப் பிரதமர் ஷோல்சும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உக்ரேனுக்குச் சென்றிருந்த அந்த மூன்று நாட்டுத் தலைவர்களுடன் ருமேனிய அதிபர் கிளவ்ஸ் யுஹனிசும் சேர்ந்துகொண்டார். ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உக்ரேனுக்கு அதிகாரபூர்வ தகுதி நிலையை உடனடியாக வழங்க தாங்கள் தயாராக இருப்பதாக அத்தலைவர்கள் கூறினர்.
அவர்களின் இந்த அறிவிப்பை வரவேற்ற உக்ரேனிய அதிபர் வொலோமிடிர் ஸெலென்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற உறுப்பு நாடுகளும் இதற்கு இணக்கம் தெரிவிக்கும் எனத் தாம் நம்புவதாகச் சொன்னார். இந்த மாதம் 23, 24ஆம் தேதிகளில் ஐரோப்பிய ஒன்றிய உச்சநிலை மாநாடு நடைபெறுகிறது.

